March 2026

 


மார்ச் 16 : மசூர் மற்றும் சத்தாரா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூட்டங்களில், சகோதரி தீபாலி லோகண்டே கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, பணித்தளங்களில் நடைபெற்ற விசேஷித்த ஜெபக் கூடுகைகளில், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் ஒருமனதுடன் ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் வீட்டு சபைகளை நடத்தும்படியாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களுக்காகவும் மற்றும் நடைபெற்றுவரும் வீட்டு சபைகளுக்காகவும் ஜெபிப்போம்.  

மார்ச் 17 : சிப்லன் பணித்தளத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான கருத்தரங்கில், சகோதரர் மேக்நாத் பவார் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். சகோ. சுந்தர்ராஜ், சகோதரி கிரேஷ் லீனா மற்றும் சகோ. நிதின் ஆகியோர் மாணவர்களை உற்சாகமூட்டும் விளையாட்டுகளை நடத்தி, அவர்களுக்காக ஜெபித்தனர். தெற்கு மண்டலத்தில் மாணவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும், மாணவர்களின் மேற்படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 18 : மல்கர் பணித்தளத்தில் முதியோர் இல்லத்திற்குச் சென்று முதியவர்களைச் சந்தித்து பரிசுகளை வழங்கவும், கிறிஸ்துவின் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் கிருபைசெய்தார். பணித்தளத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கப்பட ஜெபிப்போம். 

மார்ச் 19 : மகராஸ்ட்டிராவின் பல்வேறு பணித்தளங்களில் வேதாகமப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க கர்த்தர் வழிகளைத் திறந்தார். குடோலி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 35 பேர் பங்கேற்று தேசத்திற்காக பாரத்துடன் ஜெபித்தனர்; போதகர் பிரகாஷ் திவாடே கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். வேதாகமப் பயிற்சி வகுப்புகள் வாயிலாக அநேக ஆத்தும ஆதாயகர்கள் உருவாக ஜெபிப்போம். 

மார்ச் 20 : ஷிராலா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் ஞாயிறு ஆராதனை ஆசீர்வாதமாகவும், அநேகருக்கு பிரயோஜனமாகவும் அமைந்தது. பிலாவாடி, மல்வாடி பணித்தளங்களில் பெண்களுக்கான சிறப்புக் கூட்டங்களுடன், அவர்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக, தையல் பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, ஊழியர்களின் துணைவியருக்காக நடைபெற்ற கூடுகையில், சகோதரி ஸ்வாதி பவார் மற்றும் போதகர் சஞ்சய் பன்ஹல்கர் ஆகியோர் தேவ வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சுவிசேஷப் பணிகளுக்காகவும் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 21 : மார்ச் 5 முதல் 7 வரை பக்கார்டோலி பணித்தளத்தில் நடைபெறவிருக்கும் உபவாக் கூடுகைக்காகவும், அன்பரா பணித்தள ஆலயம் மீண்டும் தொடங்கப்படவும் மற்றும் பினா காலனி, ரேணு சாகர் காலணி, லாங்கோ காலனி, அன்பரா காலனி போன்ற பகுதிகளிலிருந்து புதிய ஆத்துமாக்கள் சபையில் சேரவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் பெண்கள் கூடுகைகளுக்காகவும் ஜெபிப்போம். 


Feb 2026

 


பிப்ரவரி 15 ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்தர்பூர், ஜப்லா, கர்வா பள்ளி, நௌதீஹா, கெருவா, இமாலியாதட், {ட்டுக்டாக், சர்திவா, சங்க்ராஹி, மொஹம்மத்கஞ்ச், பிட்கயி மற்றும் பெத்லா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களின் வாயிலாக 1325 பேருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. சிகோயி, பிர்பாடி, பொஜெங்கோ ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற கூடுகைகளில் 265 பேர் பங்கேற்று தேவ வசனத்தைக் கேட்டனர். இப்பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பின்தொடர் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

பிப்ரவரி 16 மொஹமத்கஞ்ச் பணித்தளத்தில் 3 நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஜெபித்தனர்; இக்கூடுகையில், சகோ. ஜோ பால்சன், சகோ. சரவணன் மற்றும் சகோ. எட்வர்ட் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். போச்ரா, குத்துவா, கோயிரிடோல், பஜார் சமிதி, நஸ்ரியா, கட்ரு போன்ற பணித்தளங்களில் சுமார் 1000 பேருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு, சுவிசேஷக் கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வழங்கப்பட்டன. இவர்களது இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.

பிப்ரவரி 17 சிஹவால், சுர்ஹாட், ஐதி, சித்தி, மான்பூர், உமரியா, சத்னா, மணிக்வார், கர்ரா, லோரி மற்றும் லால்கான் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக 3820 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், குளிர்கால ஆடைகளை வழங்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறுவர்களின் வாழ்க்கையில் கிறிஸ்துவின் வார்த்தைகள் கிரியை செய்யவும், இவர்களது குடும்பத்தினர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 18 கோபர்டே பணித்தளத்தில் நடைபெற்ற இலவச மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமின் மூலமாக கிறிஸ்துவின் அன்பினையும் கூடவே அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். பாண்டேதிஹ் மற்றும் பர்வாடி ஆகிய இரண்டு புதிய  கிராமங்களில் 4 பேர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்; தேவனுக்கே மகிமை! புதிதாக ஆராதனையில் பங்குபெறும் விஷால் குமார், சிவா, தர்மேந்திரா, சோனா, சியாமணி மற்றும் பெலா ஆகியோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க ஜெபிப்போம்.

பிப்ரவரி 19 உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் சுபா-சுவா, சோபன், டாலா, அன்பரா, சக்திநகர், பைதான் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில் 1450 பேர் பங்கேற்றனர். மஹராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகளில் சுவிசேஷத்தைக் கேட்ட காவல்துறை பணியாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பிற மக்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் தொடப்படவும், தங்கள் பணிகளில் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும் ஜெபிப்போம். 

Jan 2026

 


ஜனவரி -  17  சித்தி பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 250 பேர் பங்கேற்றனர்; சகோ. சைலஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசம் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் விசுவாசிகள் ஒருமனதுடன் இணைந்து ஜெபித்தனர். கர்த்தருடைய பந்தியுடன் ஆசீர்வாதமாக இக்கூட்டம் நிறைவடைந்தது. விசுவாசிகள் மத்தியில் ஜெப வாஞ்சை பெருகவும், புதிதாக ஆலய ஆராதனையில் கலந்துகொள்ளும் ஆத்துமாக்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  18  உமரியா பணித்தளத்தில் நடைபெற்ற மூன்று நாள் உபவாசக் கூடுகையில் சகோ. கயா பிரசாத் தர்வையா கலந்துகொண்டு, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினார். இக்கூட்டங்களில், 159 விசுவாசிகள் பங்கேற்றனர். மேலும், மஜியாவன் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும் 180 விசுவாசிகள் பங்கேற்று தேசத்திற்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தள விசுவாசிகள் விசுவாசத்தில் பெலப்படவும், பணித்தளங்களில் வாலிபர்கள் சந்திக்கப்படவும், வாலிபர் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் பலன் தரவும் ஜெபிப்போம்.  

ஜனவரி - 19 சித்தி, உமரியா, தேவ்கான் மற்றும் சத்னா ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 27 பேர், கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! இவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், இவர்கள் மூலமாக இவர்களது குடும்பம் மற்றும் உறவினர்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  20 பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், ஜெம்ஸ் மருத்துவ ஊழியங்கள் மூலமாக, பணித்தள மக்கள் சுமார் 2000 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையினை வழங்கவும், அவர்களுக்கு சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். ஜெம்ஸ் மருத்துவ ஊழியங்கள் மூலமாக வரும் நாட்களில் பணித்தளங்களில் செய்யப்படவிருக்கும் இலவச மருத்துவ முகாம்களின் மூலமாக, ஜனங்கள் சரீர மற்றும் ஆத்தும விடுதலை பெற ஜெபிப்போம். 

ஜனவரி - 21  முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற GIANT கூட்டத்தில், 120 விசுவாசிகள் பங்கேற்றனர்; சகோ. ஹென்றி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.  அவ்வாறே, ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் 30 பேரும், சுந்தர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஜெபக்கூடுகையில் 250 பேரும் கலந்துகொண்டு பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் நற்செய்திக் கூட்டங்கள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், நற்செய்தியினால் ஜனங்கள் விடுதலையடையவும் ஜெபிப்போம். 

    

December 2025

                                                  தெற்கு மண்டலம்

டிசம்பர் 17 பிலவாடி பணித்தளத்தில் ‘கிறிஸ்தவத் தலைவர்களின் ஐந்து தகுதிகள்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இணையவழியிலான கூடுகை பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைந்தது. சிப்ளுன் பணித்தளத்தில் முதியோருக்கான எழுத்தறிவு வகுப்புடன், வேதத்தினை வாசிக்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதன் மூலம் வரும் நாட்களில், முதியோர் வேத வசனத்தை வாசிக்கவும், தியானிக்கவும் வழி உண்டாக ஜெபிப்போம்.  

டிசம்பர் 18 நவம்பர் 1 முதல் 7 வரையிலான நாட்கள், லவாலா பணித்தளத்தில் நடைபெற்ற புநுநேஒவ டுநஎநட  2 பயிற்சியில் 20 சகோதரர்கள் மற்றும் 23 சகோதரிகள் பங்கேற்று, தலைவர்கள் வாயிலாக சிறந்த வேதாகமப் பயிற்சியினைப் பெற்றனர். ரத்னகிரி பணித்தளத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவில், 120 பேர் கலந்துகொண்டு சுவிசேஷத்தைக் கேட்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பயிற்சி ஊழியங்களுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் நற்செய்திக்கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 19 ஜப்லா பணித்தளத்தில் புதிய விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட ஒருநாள் கூடுகையினையும் மற்றும் பெத்லா பணித்தளத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். பிப்பர்டி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தினைத் தொடர்ந்து நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 200 விசுவாசிகள் கலந்துகொண்டு பாரத்துடன் ஜெபித்தனர். வரும் நாட்களில் பணித்தளங்களில் 300 ஜெபக்குழுக்களை தொடங்கும் திட்டத்திற்காக ஜெபிப்போம்.   

டிசம்பர் 20 சுண்டர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் குடும்பக் கூடுகையில் சகோ. ஜோனத்தான் எட்வர்ட் மற்றும் சகோதரி பிரின்ஸி ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையுடன், குடும்ப வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டனர். சுண்டர்பூர் மற்றும் ஜப்லா பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபங்களில் 250 பேர் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் ஜெபித்தனர். ‘எழும்பிப் பிரகாசி’ என்ற கருப்பொருளின் கீழ் சுண்டர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 65 பேரும், தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 152 பேரும் பங்கேற்றனர். பணித்தளங்களில் உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும், நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 21  துதி பணித்தளத்தில் நடைபெற்ற 21 நாட்கள் உபவாசக் கூடுகையில் விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்று தேசத்திற்காகவும் மற்றும் பணித்தளத்திற்காகவும் ஜெபித்தனர். பல்வேறு தடைகளின் மத்தியிலும், விசுவாசிகளைச் சந்தித்து அவர்களுக்காக ஜெபிக்க தேவன் கிருபைசெய்தார். பெலவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் சுகம் பெறவும், விசுவாசிகள் விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும் ஜெபிப்போம். 


November 2025

                                            தெற்கு மண்டலம்



நவம்பர் 16 சோன்பத்ரா கோட்டத்தின் தேவ்காவ், தேவ்தலாப், சித்தி, வைதான், அன்பரா மற்றும் கிவி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற குடும்பக் கூடுகைகள் மற்றும் ஆவிக்குரிய கூட்டங்களையும், சைதூப், நகர்உண்டாரி, தஸ்ரார், சங்ராய் மற்றும் மொஹமத்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்; இப்பணித்தளங்களின் மக்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், இங்கு செய்யப்பட்டுவரும் நற்செய்தி ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.

நவம்பர் 17 தேவ்காவ், உமரியா, சித்தி, ஜெப்லா, ஹைதர்நகர், மஜியோன் மற்றும் மேராஸ்  ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூட்டங்களில் 1383 விசுவாசிகள் பங்கேற்றனர். பல்வேறு பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 30 பேர், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்டோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க ஜெபிப்போம். 

நவம்பர் 18 விஸ்ராம்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்தார். கோமோ, பகர்டோலி மற்றும் ராஜ்ஹிரா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஆத்தும ஆதாயப் பயிற்சியில் 151 விசுவாசிகள் பங்கேற்றனர். தேவ்காவ், ரீவா மற்றும் மணிக்வார் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர்களுக்கானச் சிறப்புக் கூடுகையில் 150 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சகோ. வெண்ணிலவன் மற்றும் சகோ. ஷாண்டியேல் ஆகியோர் வாலிபருக்கேற்ற தேவ செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். ஆத்தும ஆதாயப் பயிற்சி பெற்ற விசுவாசிகள் ஊழியத்தில் உற்சாகம் கொள்ளவும், பணித்தள வாலிபர்களின் மனந்திரும்புதலுக்காகவும் ஜெபிப்போம்.   

நவம்பர் 19 போச்ரா, ஹைதர்நகர், பகர்டோலி மற்றும் ராஜ்ஹிரா ஆகிய பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில் 204 பெண்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டங்களில், சகோதரி சாவித்ரி, சகோதரி தாமந்தி, சகோதரி சுனிதா, சகோ. அப்பாத்துiரை மற்றும் சகோதரி ஜெபா ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். பணித்தளங்களில் நடைபெறும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் உறவினர்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். 

நவம்பர் 20 ஜெப்லா, சுந்தர்பூர் மற்றும் பட்கோஹி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபங்களில் 335 விசுவாசிகள் பங்கேற்று பணித்தளத்திற்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் ஜெப வீரர்கள் எழும்பவும் மற்றும் விசுவாசிகள் தங்கள் ஜெப வாழ்க்கையில் வளரவும் ஜெபிப்போம். 

October 2025

                                                     தெற்கு மண்டலம்



அக்டோபர் : 17 ஜப்லா பணித்தளத்தில் ‘மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளின் கீழ் மூன்று நாட்கள் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 120 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; இக்கூட்டங்களில், ராஞ்சியைச் சேர்ந்த சகோ. விக்கி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, இப்பணித்தளத்தில் நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 150 விசுவாசிகள் கலந்துகொண்டு, இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களுக்காகவும் மற்றும் தேசம் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் பாரத்துடன் ஜெபித்தனர். இரட்சிக்கப்படாத வாலிபர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும், தங்கள் பாவ வழிகளிலிருந்து மனந்திரும்பவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 18 சத்தர்பூர் பணித்தளத்தில் செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 150 விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழிங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். தொடர்ந்து, செப்டம்பர் 4 அன்று இப்பணித்தளத்தில் நடைபெற்ற மண்டல கன்வென்ஷன் கூட்டத்தில் 150 பேர் கலந்துகொண்டு கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டனர். செப்டம்பர் 18 அன்று இப்பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் 70 பேர் கலந்துகொண்டனர். வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 19 ஹைதர்நகர் பணித்தளத்தில் ‘தடைகளைத் தகர்ப்போம்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும், தொடர்ந்து, செப்டம்பர் 12 அன்று மகுவாதத் பணித்தளத்திலும், செப்டம்பர் 16 அன்று போஜைகா மற்றும் சீகோய் பணித்தளங்களிலும், செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தினங்கள் ஜப்பன் பணித்தளத்திலும் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளில் 359 பேர் கலந்துகொண்டு பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காக ஒருமனதுடன் ஜெபித்தனர். விசுவாசிகள் மத்தியில் ஜெப வாஞ்சை பெருகவும், விசுவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 20 செப்டம்பர் 2 அன்று கட்டோலி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் ஜெபக் கூட்டத்தில் 63 விசுவாசிகளும் மற்றும் பட்கோய் பணித்தளத்தில் செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 30 விசுவாசிகளும் கலந்துகொண்டு, தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபித்தனர். பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், ஜனங்கள் விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 21 கும்லா பக்கர்டோலி பணித்தளத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தினங்கள் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில், ‘சாட்சியான கிறிஸ்தவ வாழ்க்கை’ என்ற தலைப்பின் கீழ் சகோ. வென்னிலவன் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்; இக்கூடுகையில், 72 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பணித்தளங்களில், வாலிபர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தர ஜெபிப்போம். 



 

SEP 2025

                                          தெற்கு மண்டலம்

செப்டம்பர் 16  ஜார்ஹா மற்றும் லடாக் பணித்தளங்களில் 130 சிறுவர் சிறுமியருக்கு வசனங்கள் மற்றும் வேதாகம கதைகளின் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். மேலும், டோர்பா,  லோஹிங்கா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஜெபக்கூடுகைகளையும், போச்ரா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாச கூடுகையினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பணித்தளங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஞாயிறு பள்ளிகளுக்காக ஜெபிப்போம்.

செப்டம்பர் 17 ஆகஸ்ட் 23 அன்று ஹைடர்நகரில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 90 பேர் பங்கேற்றனர். சகோ. சுரேந்தர், சகோ. சஞ்சய், சகோ. க்யான் ஆகியோர் “பலவானுக்கு” என்ற தலைப்பின்கீழ் வேத வசனங்களைப் பகிர்ந்துகொண்டனர். சத்தர்பூர் மற்றும் மஜியாவ் பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். அன்பரா பணித்தள ஊழியர்களுக்காகவும் மற்றும் வேலை இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 18 கார்கட்டா கிராமத்தில் வீட்டுக் கூட்டத்தினையும், ஜப்லா மற்றும் சத்தார்பூர் பகுதிகளில் இரவு ஜெபக் கூட்டங்களையும் நடத்த கர்த்தர் உதவி செய்தார்.  ஆகஸ்ட் 20 அன்று முகம்மத்கஞ்ச் மிஷன் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 64 பேர் பங்கேற்றனர். இப்பணித்தள ஊழியர்களுக்காகவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் விசுவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 19 ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் பகர்தோலி பணித்தளத்தில் “தடைகளை உடைத்திடுவோம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் 210 பேர் பங்கேற்றனர்.தசாரா, மஜியாவ், முகம்மத்கஞ்ச் மிஷன் ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட தசரா,  மஜியா, முகமத்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் 16 பேரும், தேவ்காவ் பகுதியில் 19 பேரும், சிதி பகுதியில் 11 பேரும் உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். டோர்பா, லோஹிங்கா, பூர்குண்டா, கடுரு, ஹிந்த்காரா ஆகிய பணித்தளங்களில் ஆலயம் கட்டப்பட எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காக ஜெபிப்போம்.

செப்டம்பர் 20 வைதான், சிதி, தேவ்காவ், மணிக்வார் ஆகிய பணித்தளங்களில் குடும்பக் கூடுகைகளை நடத்தவும், தேவ்காவ் பணித்தளத்தில் மூன்று நாட்கள் உபவாசக் கூடுகையில் 100 பேரும், சிதி பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 125 பேரும் பங்கேற்றனர். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் சந்தோஷ், வுடீ நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் சிந்தாமணி சாகேத் மற்றும் தீய ஆவிகளால் கட்டுப்பட்டிருந்த சகோதரி புட்டி சாகேத் மற்றும் ராஜேந்திர கேர்வார் ஆகியோர் ஜெபத்தின் மூலம் சுகம் பெற்றனர்; தேவனுக்கே மகிமை! சரீர சுகம் பெற்றவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கவும், அவர்களது குடும்பத்தினர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும், இவர்கள் தொடர்ந்து ஆலய ஆராதனையில் பங்கேற்கவும் ஜெபிப்போம்.